அய்யர் வரும்வரை அமாவாசை காத்திராது என்பது பழமொழி. அதுபோல காலம் எதுக்காகவும், யாருக்காகவும் காத்திருப்பது இல்லை… ஆனால், காலத்துக்கும் அழியாத நிலையில் இன்றும் வாழும் நம் முன்னோர்களின் படைப்புகள் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்… அவை இன்றும் அவர்கள்தம் பெருமையை இவ்வுலகிற்கே பறைசாற்றி வருகின்றன என்பது நிதர்சனம். அவ்வகையில் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் கோயில் ஒன்றில், சூரிய ஒளியினால் இயங்கக்கூடிய கடிகாரம் ஒன்று இன்றளவும் அதை பார்க்கிறவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகிறது.
ஆம். கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருவிசநல்லூர் எனும் ஊரில் சோழர்கள் காலத்தில் கட்டபெற்ற சிவயோகி நாதர் சிவன் கோயிலுடைய சுத்துச்சுவரில் இச்சூரியஒளி கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஆண்டு கால மிகப் பழமையான கோவில் ஆகும். இங்குள்ள இச்சூரியஒளி கடிகாரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஆணியில் படும் சூரிய ஒளியினால் ஏற்படும் நிழல், நமக்கு நேரத்தை அறிவிக்கலாகிறது.
இந்நிழல் விழக்கூடிய பகுதிகளாவன. காலை சூரியன் உதிக்கக்கூடிய அதிகாலை 6மணி முதல் மாலை சூரியன் மறையக்கூடிய 6மணி வரையிலும், ஒவ்வொரு மணித்துளிகளையும் மிகத்துல்லியமாக இவ்வமைப்பு காட்டுகிறது. ஆகம விதிகளின்படி ஒவ்வொரு கோயிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையில் திருப்பணிகள் நடைபெறும். அத்துடன் குடமுழுக்கும் நடைபெற வேண்டும் என்பது விதி… ஆனால் சுமார் அறுபத்து இரண்டு ஆண்டுகளாக இக்கோவிலில் எந்த திருப்பணிகளும் நடைபெறாமல், குடமுழுக்குக் கூட நடைபெறாமல் உள்ளது.
தொன்மை மிக்க இக்கோவிலை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். காலம் தவறாது காலம் காட்டக்கூடிய இக்கடிகாரத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அம்மக்கள் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறார்கள். தொன்மையை பாதுகாக்கும் அவர்கள்தம் முயற்சிக்கு செவிசாய்ப்போம். இயன்றால் நாமும் சென்று பார்த்து அறிவோமாக...
வாழ்க வையகம்.
No comments:
Post a Comment